பத்து மணி நேரம் தொடர்ந்து பந்து வீசி சாதனை படைத்துள்ள மாணவர் செந்தில்குமாருக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
பத்து மணி நேரம் தொடர்ந்து கிரிக்கெட் பந்து வீசி சாதனை படைத்துள்ள பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் மாணவர் செந்தில்குமாரை மனமார வாழ்த்துகிறேன்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகில் உள்ள கரைசுற்றுபுதூரில் எளிமையான குடும்பத்தில் பிறந்து, விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், இடது கையை பின்னால் கட்டிக்கொண்டு வலது கையால் 450 ஓவர்கள் தொடர்ந்து பந்து வீசி, செந்தில்குமார் நிகழ்த்தியுள்ள அரிய சாதனை வியக்கத்தக்கது.
இலக்கை நிர்ணயித்துக் கொண்டால் எதிலும் வெற்றிபெற முடியும் என்பதை தனது சாதனை மூலம் செந்தில்குமார் சமுதாயத்துக்கு எடுத்துரைத்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.