காதலர் தினத்தையொட்டி, மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா நகரில் புதன் கிழமை ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்தனர்.
மாமல்லபுரத்துக்கு காதலர் தினத்தைக் கொண்டாட கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஏராளமான காதல் ஜோடிகள் வந்திருந்தனர். காலை 10 மணிமுதலே காதல் ஜோடிகள் இருசக்கர வாகனத்திலும், பேருந்துகளிலும் வரத் தொடங்கினர்.
சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம், மதுராந்தகம், செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுகுன்றம், கல்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகள் வந்திருந்தனர். இவர்கள், கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, குடைவரைக் கோயில்கள் , மண்டபங்கள், புலிக்குகை ஆகிய இடங்களைச்சுற்றி பார்த்தும் கடலில் குளித்தும் காதலர் தினத்தை கொண்டாடினர். நட்சத்திர ஓட்டல்களில் வெளிநாட்டு காதல் ஜோடிகளும் ரோஜா பூக்களை தங்களுக்குள் பரிமாறி காதலர் தினத்தை கொண்டாடினர்.
காதலர் தினத்தையொட்டி கிழக்கு கடற்கரை சாலை, ஈசிஆர் சாலை நெடுகிலும் உள்ள பொழுது போக்கு மையத்தில் நூற்றுக்கணக்கான காதல் ஜோடிகள் வலம் வந்தனர். எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.