கோவை விரைவு ரயிலில் ஈரோடு வந்த கல்லூரி மாணவர் கீழே இறங்கும்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து ரயிலில் அடிபட்டு புதன்கிழமை உயிரிழந்தார்.
ஈரோடு அருகே மூலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மகன் கெளரவ்குமார் (19). இவர், வேலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், சென்னையில் இருந்து கோவை செல்லும் விரைவு ரயிலில் காட்பாடியிலிருந்து ஈரோட்டுக்குப் பயணித்துள்ளார். இந்த ரயில் மதியம் சுமார் 12 மணியளவில் ஈரோடு ரயில் நிலையத்துக்கு வந்ததும், ரயிலில் இருந்து கெளரவ்குமார் இறங்கியபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ரயில் சக்கரத்தில் சிக்கினார். சுமார் 50 அடி தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, ஈரோடு ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.