சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் ஞாயிறு மதியம் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் 'திடீர்' சந்திப்பு நடைபெற்றுள்ளது.
தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் கமல் பிப்.21 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாகவும், அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த சுற்றுப் பயணத்தை முதல்கட்டமாக ராமேஸ்வரத்தில் ஆரம்பித்து பின் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க உள்ளதாகவும், ”மக்களின் ஆதரவோடு இந்த சுற்றுப் பயணம் தொடங்கிகிறேன் கரம் கோர்த்திடுங்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
அதேபோல அரசியல் பிரவேசத்தினை அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்திற்கான நிர்வாகிகள் நியமனம் , கூட்டங்கள் என்று தொடர்ந்து பரபரப்பாக செயல்பட்டுவருகிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் ஞாயிறு மதியம் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் 'திடீர்' சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சுமார் அரை மணி நேரத்திற்கு நீடித்த இந்த சந்திப்பின் முடிவில், நடிகர் ரஜினிகாந்த் வாயில் வரை வந்து கமலின் கார் கதவினை சார்த்தி வழியனுப்பினார்.
இருவருமே அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.