கடலோர மண்டல மேலாண்மை திட்டம் குறித்து ஆலோசனை மற்றும் ஆட்சேபனைகளை இன்று முதல் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என சுற்றுச்சூழல் துறை இயக்குநர் அ.வ. வெங்கடாசலம் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011-ன்படி, மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்றம் துறையின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் தமிழகத்துக்கான கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் தயாரிக்கும் பணி சுற்றுச்சூழல் துறைக்கு வழங்கப்பட்டது.
அதன்படி நீடித்த கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம், சென்னை என்ற மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்துக்கு இத்திட்டம் தயாரிக்கும் பணி வழங்கப்பட்டு, கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2011 வழிமுறைப்படி, தமிழகத்துக்கான வரைவு கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கையின் இணைப்பு 1, பத்தி ஐய(ஹ) - ன் படி தமிழகத்துக்கான வரைவு கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் குறித்து அரசுத் துறைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள, உள்ளூர் சமூகங்கள், பொது மக்களின் ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளை சுற்றுச்சூழல் துறையின் இணையதளத்திலும் (http://www.environment.tn.nic.in) மற்றும் இத்துறையின் ENVIS மையத்தின் இணையதளத்திலும் (http://www.tnenvis.nic.in) வெளியிடப்படும்.
எனவே, நிறுவனங்கள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் வரைவு கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் குறித்த தங்களின் ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின், இத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேதியில் இருந்து தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுத்து மூலம் இத்துறைக்கு ஏப்ரல் 6-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.