உணவு விடுதியின் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை ஆஜரான சமூக ஆர்வலர் பாடம் நாராயணன், "காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே புதன்கிழமை (பிப்.14), தனியார் உணவு விடுதியின் கழிவுநீர் தொட்டியைச் சுத்தபோது துப்புரவு தொழிலாளர்கள் முருகேசன், மாரி, உணவு விடுதியின் மின் பணியாளர் ரவி ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். எனவே, மனிதக் கழிவுகள் அகற்றுவது தொடர்பாக, தான் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும்' என முறையிட்டார்.
அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, "அரசு பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து விழிப்புணர்வு கொடுத்து வந்தாலும் இதுபோன்ற நிகழ்வுகள் வேதனை அளிக்கிறது' எனத் தெரிவித்தார். மேலும் ஸ்ரீபெரும்புதூரில் உணவு விடுதியில் நிகழ்ந்த சம்பவத்தில் உயிரிழந்த 3 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் வழக்கை திங்கள்கிழமை (பிப்.26) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.