மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில புதிய செயலராக கே. பாலகிருஷ்ணன் (65) செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் 22 ஆவது மாநில மாநாடு, தூத்துக்குடியில் கடந்த 17 ஆம் தேதி தொடங்கி நான்கு நாள்கள் நடைபெற்றது. நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை, நிர்வாகிகள் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, கட்சியின் தமிழ் மாநில புதிய செயலராக கே. பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
அவரை கட்சியின் அகில இந்திய செயலர் சீத்தாராம் யெச்சூரி அறிமுகம் செய்துவைத்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, முன்னாள் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் உடனிருந்தார். 15 பேர் கொண்ட மாநில செயற்குழு உறுப்பினர்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
புதிய செயலர் கே. பாலகிருஷ்ணன், கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர். எம்ஏ உளவியல் படித்துள்ளார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மாணவர் மன்ற முதல் தலைவராக பொறுப்பு வகித்தவர். கட்சியின் கடலூர் மாவட்டச் செயலராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலராகவும், தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை சிதம்பரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.
கே. பாலகிருஷ்ணனுக்கு ஜான்சிராணி என்ற மனைவியும், கோபிநாதன், விசுவநாதன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன் வாழ்த்து:
கே.பாலகிருஷ்ணனுக்கு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: கே.பாலகிருஷ்ணனுக்கு திமுக சார்பில் என் மனமார்ந்த வாழ்த்துகள். விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித்தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி, அவர்கள் மத்தியிலும் அடித்தட்டு மக்கள் மத்தியிலும் நற்பெயர் பெற்றவர்.
தன்னைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் பிரச்னைகள் மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள பல்வேறு முக்கியமான பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவையில் மிக ஆழமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் வாதங்களை எடுத்து வைத்தவர் என்பதை நானறிவேன்.
பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, பலமுறை சிறை சென்றுள்ள அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பதவியில் சீர்மிகு பணியாற்றி வெற்றிபெற வாழ்த்துகள்.
ஜி.கே.வாசன்: நீண்ட நெடிய அரசியல் பயணத்துக்கும், கடின உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்திருக்கும் அங்கீகாரமாக கே.பாலகிருஷ்ணனுக்கு மாநிலச் செயலாளர் பதவி கிடைத்துள்ளது. அவரின் பணிகள் சிறக்க வாழ்த்துகள்.