காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், சீமான், ஜி.கே.வாசன், கி.வீரமணி, ஜி.கே.மணி, சரத்குமார், செ.கு.தமிழரசன், தமிமுன் அன்சாரி, வேல்முருகன், கிருஷ்ணசாமி, தனியரசு, ஈஸ்வரன் உட்பட மொத்தம் 30 அரசியல் கட்சிகள், 9 அரசியல் அமைப்புகள், 54 விவசாய அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
மேலும் கூட்டத்தில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் பங்கேற்றுள்ளனர்.
இதில் பேசிய எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர்ப்பாசனத்துக்கு தனி அமைச்சகம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காவிரி உரிமையை நிலைநாட்ட அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக ஆதரவு அளிக்கும், காவிரியை தனக்கே சொந்தமாக்கிக் கொள்ளும் கர்நாடகாவின் சுயநலப்போக்கு இன்றுவரை மாறவில்லை, பிரதமரைச் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.