திருவண்ணாமலை: திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே முன்னால் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வெங்கல சிலைகளை சில மாதங்களுக்கு முன்பு தெற்கு மாவட்ட அதிமுக.வினர் நிறுவினர்.
இந்தச் சிலைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. அதனால், இரண்டு சிலைகளையும் மூடியே வைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தெற்கு மாவட்டத்தின் சில இடங்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் சிலைகளை அதிமுக.,வினர் உரிய அனுமதியின்றி நேற்றிரவு வைத்தனர். அவ்வாறு நான்கு இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளை இன்று காலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலையில் திறக்கப்படாமல் இருந்த சிலைகளின் அருகே 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிலையையும் போலீசார் எடுத்துவிடுவார்களோ என்று அதிமுக.வினர் தெற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டுள்ளனர். அதிமுக.வினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 200-க்கும் மேற்பட்ட அதிமுக.வினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.