மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தினார்.
சென்னையில் சனிக்கிழமை அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். இவ்விழாவுக்கு தலைமை தாங்கி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசும்போது, இக்கோரிக்கையை பிரதமரிடம் முன்வைத்தார். விழாவில் முதல்வர் பேசியது:
வரலாற்றில் இடம்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த ஆண்டு முழுவதும், 70 லட்சம் மரக்கன்றுகளை நடுவது என்ற இலக்கோடு மரம் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்வராகப் பொறுப்பேற்றதும் ஐந்து திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டேன். அதில் முதல் திட்டம் அம்மா இருசக்கர வாகனத் திட்டமாகும். பிரதமர் இதைத் தொடங்கி வைப்பதன் மூலம், இந்தத் திட்டத்துக்கு மேலும் பெருமை கிடைத்துள்ளது. இது வரலாற்றில் இடம்பெற்று விட்டது.
இத்திட்டத்தின்படி, ஆண்டுக்கு ஒரு லட்சம் மகளிர் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25 ஆயிரம் மானியம் அளிக்கப்படும்.
பிரதமரிடம் கோரிக்கை: உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தமிழகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.