மதுரை அலங்காநல்லூரில் ஜனவரி 16ல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டை பாதுகாப்பாக நடத்துவதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் அனைத்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் வீரராகவ ராவ்,
ஜனவரி 14ல் அவனியாபுரம், 15ல் பாலமேடு, 16ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. 500 முதல் 800 காளைகள் வரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.
விதிமுறைகள் குறித்து ஜல்லிக்கட்டு கமிட்டியிடம் விரிவாக கூறப்பட்டுள்ளது. காளைகளை வீரர்கள் துன்புறுத்தாமல் இருத்தல் வேண்டும். பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுவர். கடந்தாண்டு மதுரை மாவட்டத்தில் 30 இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வழக்கமாக 2 மணி வரை ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்தாண்டு ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.