நாட்டறம்பள்ளியில் கடந்த சில மாதங்களாக கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாட்டறம்பள்ளியில் உள்ள வணிக நிறுவனங்கள், ஜவுளி, ஓட்டல், அரசு மதுபானக் கடைகள் உள்ளிட்ட மக்கள் கூட்டம் அலைமோதும் இடங்களில் சமூக விரோதிகள் சிலர் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுகின்றனர். இவர்கள், வியாபாரிகளிடம் பணத்தைக் கொடுத்து பொருள்களை வாங்கிக் கொண்டு மீதி சில்லறையாக நல்ல நோட்டுகளைப் பெற்று செல்கின்றனர்.
இதேபோல, அரசு மதுபானக் கடை, பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன.
இவற்றை வியாபாரிகள் வாங்கி வங்கியில் செலுத்தும் போது அவை கள்ள நோட்டுகள் என வங்கி அதிகாரிகள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், கள்ள நோட்டுக்களை மீண்டும் கொண்டு வந்தால் காவல் நிலையத்தில் புகார் செய்வோம் என எச்சரிக்கை செய்கின்றனர். இதனால் வியாபாரிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நாட்டறம்பள்ளி பகுதியில் கள்ள நோட்டுகளை புழகத்தில் விடும் கும்பலைப் பிடிக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.