மாசு ஏற்படுத்தும் வாகனங்களைப் பறிமுதல் செய்ய சிறப்பு பறக்கும் படை அமைக்கக்கோரிய மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
காற்று மாசடைவதற்கு வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும் முக்கியக் காரணமாக உள்ளது. 2015-இல் நடத்தப்பட்ட ஆய்வின்படி காற்று மற்றும் நீர் மாசு காரணமாக 25 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் காற்று மாசு காரணமாக இறந்தவர்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையின் அளவைத் தடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
எனவே தமிழகத்தில் தாலுகா அளவில் சிறப்பு பறக்கும் படைகளை அமைத்து அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தும், தொடர்ந்து தவறு செய்பவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசின் போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.