மின்னாளுமைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களைக் கொண்ட 'மின்னாளுமைக் கொள்கை-2017'-யை, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
அரசுத் துறைகளில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு அவர்களின் இருப்பிடத்தின் அருகிலேயே அரசின் சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள 'மின்னாளுமைக் கொள்கை 2017' -யை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். அதனை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் பெற்றுக் கொண்டார்.
முக்கிய அம்சங்கள்: இந்த மின்னாளுமை கொள்கையின் மூலமாக, 2023-ஆம் ஆண்டுக்குள் அரசின் சேவைகள் அனைத்தையும் இணையத்தின் வாயிலாக வழங்குதல், பொது சேவை மையங்கள் மற்றும் கைபேசி செயலிகள் மூலம் அரசின் சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் நம்பகத் தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை அதிகரிக்க இந்த நடவடிக்கை உதவும்.
மாநிலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளை ஒருங்கிணைந்த முறையில் அரசுத் துறைகள் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தித் திறன் அதிகரிப்பதுடன், கணினி பராமரிப்பு செலவினமும் குறையும்.
அரசுத் துறைகள் தங்களது ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் முதல் கட்டமாக 0.5 சதவீதத்தை மின்னாளுமைத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யவும், பின் படிப்படியாக அதை 5 ஆண்டுகளுக்குள் 3 சதவீதமாக அதிகரிக்கவும் மின்னாளுமை கொள்கை வழிவகுக்கும் என அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னாளுமை கொள்கை வெளியீட்டு நிகழ்வில், அரசின் தலைமைச் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) க.சண்முகம், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் தா.கி.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.