ஆன்மிக அரசியல் மூலம் திராவிட இயக்கங்களை அழிப்பதற்கு சிலர் முயற்சிப்பதாகவும் அந்த முயற்சி எடுபடாது என்றும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை ரஜினி சந்தித்துச் சென்ற பின்பு, செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியது:
ஆசி வாங்க வந்தது உண்மைதான்: கருணாநிதியை ரஜினிகாந்த் சந்திப்பது புதிது இல்லை. 4 மாதங்களுக்கு முன்பே கருணாநிதியைச் சந்தித்து உடல் நலம் விசாரித்து சென்றார். அதனால், இதில் அதிசயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இல்லத்துக்கு வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்பது தமிழரின் பண்பாடு. அந்த அடிப்படையில் வரவேற்றோம். கருணாநிதியைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். என்னுடைய தாயார் தயாளு அம்மாளையும் சந்தித்து நலம் விசாரித்தார். அரசியல் பிரவேசத்துக்காக கருணாநிதியிடம் அவர் ஆசி வாங்கினாரா என்று கேள்வி எழுப்புகிறீர்கள். அது உண்மைதான். அவரும்கூட ஆசி வாங்க வந்ததாகக் கூறியுள்ளார்.
நடிகர் விஜயகாந்த் புதிய கட்சி தொடங்கியபோதும் கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அரசியல் பண்பாடு மற்றும் அரசியல் நாகரிகத்தின் அடிப்படையில் கருணாநிதியும் இன்முகத்துடன் வாழ்த்தியிருக்கலாம் என்றார் ஸ்டாலின்.
தேர்தல் நேரத்தில் முடிவு: பின்னர், ரஜினி ஆசி மட்டும் கேட்கிறாரா அல்லது திமுகவின் ஆதரவையும் கேட்கிறாரா என்று செய்தியாளர் ஒருவர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு மு.க.ஸ்டாலின் கூறியது: இது தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால், ஆன்மிக அரசியலை நடத்தப் போவதாக அவர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
தமிழகத்தில் உள்ள திராவிட இயக்கத்தை அழித்து விட வேண்டும் என்று சிலர் திட்டமிட்டு, பலருடைய தூண்டுதலால் ரஜினி கட்சி தொடங்கியிருப்பதாக ஒரு சித்திரத்தை, ஒரு உருவகத்தை உருவாக்கி வருகின்றனர்.
அவர்களுக்கு எல்லாம் நான் தெளிவாகச் சொல்லிக் கொள்வது, தமிழகத்தின் மண் திராவிட இயக்கத்தின் மண். பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரால் பண்பட்டு இருக்கின்ற மண். அப்படிப்பட்ட திராவிட இயக்கத்தை அழிப்பதற்கு யார் யாரோ இதற்கு முன் முயற்சித்துப் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் கதைகள் எல்லாம் நாட்டுக்கே நன்கு தெரியும்.