பொலிவுறு நகரங்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
இந்தியா முழுவதும் 90 பொலிவுறு நகரங்களை அமைக்கும் பணி ரூ. 1.91 லட்சம் கோடியில் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இந்தத் திட்டத்தின்படி தமிழகத்தில் 11 நகரங்கள், பொலிவுறு நகரங்களாக மாற்றப்படவுள்ளன. இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் இந்தத் திட்டங்களில் குறிப்பிடத்தக்க வகையில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
தமிழகத்திலுள்ள 11 பொலிவுறு நகரங்கள் திட்டத்துக்காக இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 0.5 சதவீதம் கூட செலவிடப்படவில்லை. எடுத்துக்காட்டாக, சென்னையில் பொலிவுறு நகரம் திட்டம் ரூ.1,366 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் முதல் கட்டமாக மத்திய அரசின் சார்பில் ரூ.196 கோடி, மாநில அரசின் சார்பில் ரூ.200 கோடி, சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.496 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதியிலிருந்து இதுவரை ரூ.3.82 கோடி மட்டுமே, அதாவது 0.77 சதவீதம் மட்டுமே செலவிடப்பட்டிருப்பதாக மத்திய அரசு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இதேநிலை நீடித்தால் பொலிவுறு திட்டங்கள் சாத்தியமாகாது. இனியாவது, பொலிவுறு நகரங்களை உருவாக்குவதற்கான சிறப்பு பயன்பாட்டு நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளித்து பொலிவுறு நகரங்கள் அமைக்கும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும் என்றார் அவர்.