பணிமூப்புப் பட்டியல் தயாரித்து காவல் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப அரசுக்கு உத்தரவு

காவல் துறையில் பதவி உயர்வு வழங்குவதற்கான பணிமூப்புப் பட்டியலை தயாரித்து காலியாக உள்ள பதவிகளை நிரப்ப தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


காவல் துறையில் பதவி உயர்வு வழங்குவதற்கான பணிமூப்புப் பட்டியலை தயாரித்து காலியாக உள்ள பதவிகளை நிரப்ப தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சந்தனக் கடத்தல் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளை கடந்த 2004 -ஆம் ஆண்டு சிறப்பு அதிரடி படையினர் சுட்டுக் கொன்றனர். இந்தப் பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கு தலா ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசும், ஒரு படி பதவி உயர்வும் வழங்கி தமிழக அரசு கடந்த 2004 -ஆம் ஆண்டு அக்டோபரில் அரசாணை பிறப்பித்தது. இந்த உத்தரவுப்படி, 757 போலீஸாருக்கு ரொக்கப்பரிசு மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டன. 
இந்த பதவி உயர்வு உத்தரவை எதிர்த்து பல வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கை 
விசாரித்த உயர் நீதிமன்றம், 'வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு பதவி உயர்வு மட்டும்தான் வழங்கப்பட்டுள்ளது. இதை காரணமாக வைத்து அவர்களுக்கு பணிமூப்பு வழங்க முடியாது' என உத்தரவிட்டது. இந்த நிலையில், 'காவல் ஆய்வாளர், துணை கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான புதிய பணிமூப்புப் பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும்' என வீரப்பன் தேடுதல் வேட்டையில் பங்கேற்ற எஸ்.பிரபாகரன் உள்ளிட்ட 23 பேர் நீதிமன்றத்தில் வழக்குத் 
தொடர்ந்தனர். 
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், 'வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு பதவி உயர்வு வழங்கினால் வழக்கமான பதவி உயர்வுக்காக காத்திருக்கும் 950 போலீஸ் அதிகாரிகள் பாதிக்கப்படுவார்கள்' என வாதிட்டார். 
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.துரைசாமி, 'உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
அப்போது அரசு தரப்பு வழக்குரைஞர், 'இதுதொடர்பாக மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் எந்த மேல்முறையீடும் செய்யப்படவில்லை' என்றார். 
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது குறித்து எந்த ஆவணங்களும் தாக்கல் செய்யப்படவில்லை. பணிமூப்பு மற்றும் காலிப்பணியிடங்களுக்கான பட்டியல் தயாரிக்கப்படாமல் உள்ளதால் 950 போலீஸார் பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக வாதிடப்பட்டது. 
எனவே வழக்கமான பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இந்த பதவி மூப்பு என்பது நிலுவையில் உள்ள வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது' என உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com