மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை விடியோவை வெளியிட்டது தொடர்பான வழக்கில் டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேலுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை விடியோவை டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் கடந்த டிச.20-
ஆம் தேதி வெளியிட்டார். இதனையடுத்து ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீஸார், அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதே போல் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் செயலாளர் பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அண்ணாசதுக்கம் போலீஸார் வெற்றிவேல் மீது மற்றொரு வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குகளில் இருந்து காவல்துறை தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தான் வெளியிட்ட
விடியோவை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்துவிட்டதாக வெற்றிவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது வெற்றிவேலுக்கு முன்ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வெற்றிவேல் இரண்டு வார காலத்துக்கு தினமும் காலை 10.30 மணிக்கு அண்ணாசதுக்கம் காவல்நிலையத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராகும் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.