திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டம் ஞாயிற்றுக்கழமை நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எந்த நிலையிலும் திமுக-வை யாராலும் அழிக்க முடியாது. போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு முதல்வரிடம் தொலைபேசியில் கோரிக்கை வைத்தேன். அதற்கு அவர் தொடர்ந்து பேசி வருவதாக தெரிவித்தார்.
திமுகவின் மண்டல மாநாடு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையில், கட்சியில் சில ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வதற்காக மண்டல வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளோம். இதுதொடர்பாக ஏற்கனவே நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. அடுத்தகட்ட நடவடிக்கைகள் நிச்சயமாக தொடரும்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னுடைய ஜனநாயக கடமைகளை தொடர்ந்து செய்து வருகிறேன். அது இனிவரும் காலங்களிலும் தொடரும். விவசாயிகளும், நெசவாளர்களும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பலதரப்பினரும் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
இந்த அரசாங்கமே எல்லாருக்கும் போராட்டக் களமாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.