சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி மக்களை இழிவுபடுத்தும் விதமாகக் கருத்துத் தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குத் தொடரும் எண்ணமில்லை என அத்தொகுதியின் எம்எல்ஏ டிடிவி. தினகரன் கூறினார்.
இதுதொடர்பாக அவர், தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை மேலும் கூறியதாவது:
ஆர்.கே.நகர் தொகுதி மக்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், 'வேண்டுமானால் என் மீது வழக்குத் தொடரட்டும்' என்றும் கூறியுள்ளார். ஆனால், அவர் மீது வழக்குத் தொடரும் எண்ணம் ஏதுமில்லை.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்த விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, தொழிலாளர்களை மிரட்டும் வகையில் அரசு செயல்படுவது சரியான அணுகுமுறை அல்ல. தொழிலாளர்களை அரசு அழைத்துப் பேசி சுமுகத் தீர்வு காண வேண்டும்.
மூத்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் அவை முன்னவர் பதவியைப் பறித்து ஓ. பன்னீர்செல்வத்துக்கு வழங்கியுள்ளது வருத்தப்படக்கூடிய விஷயம். தொண்டர்களின் விருப்பப்படி அதிமுக, கட்சி சின்னத்தின் உரிமைக்காக தொடர்ந்து போராடி வருகிறோம்.
பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு, அதிமுக கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீதான வழக்கு ஆகியவற்றில் விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்றார் அவர்.
பேட்டியின்போது, மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, அமைப்புச் செயலர் மாணிக்கராஜா, மாநகராட்சி முன்னாள் மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக, தூத்துக்குடி கிழக்கு பகுதிச் செயலர் எல். எட்வின்பாண்டியன் இல்லத்தில் நடைபெற்ற திருவிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துத் தெரிவித்த டிடிவி தினகரன், தொடர்ந்து, புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் வழிபாடு நடத்தினார்.