தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் தங்களது நிலையை இழந்து வருகின்றன என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வேலூருக்கு சனிக்கிழமை வந்த அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் தங்களது நிலையை இழந்து வருகின்றன. அதிமுகவின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்டு கொண்டிருக்கிறது. திமுக அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது புதிய மாற்றமாக இருக்கும் என மக்கள் நினைக்கலாம். ஆனால், பாஜகவை தமிழகத்தில் வலுவான கட்சியாக மாற்றும் நடவடிக்கையில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் மறுஉருவம் ரஜினி என திருமாவளவன் கூறுவது வேதப்புத்தகத்தில் எழுதப்பட வேண்டியதாகும்.
முத்தலாக் தடைச் சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இச்சட்டத்தால் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைத்துள்ளது.
கன்னியாகுமரியில் இணைய துறைமுகம் வேண்டாம் எனக் கூறுவது வைரக் கிரீடத்தைப் புறக்கணிப்பது போன்றதாகும்.
போக்குவரத்துத் தொழிலாளர்களை போராடும் நிலைக்கு அரசு விட்டிருக்கக் கூடாது. இப்பிரச்னையில் அரசு சரியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் அறுவுறுத்தல்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.