வேலை நிறுத்தப் போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியானதும், பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்ட போக்குவரத்து ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்குரைஞர் பிரீத்தா என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவின் விவரம்: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை (ஜன. 4) மாலை முதல் அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர், ஓட்டுநர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலை நிறுத்த அறிவிப்பு வெளியானவுடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகளில் பயணித்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் நடுவழியில் இறக்கிவிடப்பட்டனர். போக்குவரத்து ஊழியர்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக போராட்டம் நடத்த முழு உரிமை உள்ளது. ஆனால், பேருந்தில் பயணித்தவர்களை பாதியில் இறக்கிவிட்டது மோசமான நடவடிக்கையாகும்.
இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களின் விவரங்களைச் சேகரித்து அவர்கள் மீது எஸ்மா சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இந்த இழப்பீடு எவ்வளவு என்பதை போக்குவரத்து துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கணக்கிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு திங்கள்கிழமை (ஜன. 8) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.