மாணவர்களுக்காக மத்திய அரசு நடத்தும் எந்தத் தேர்வாக இருந்தாலும் அதை எதிர்கொள்வதற்காக தமிழகம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளதாக மாநில கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஆம்பூரில் நடைபெற்ற இந்து கல்விச் சங்க நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாணவர்களுக்காக மத்திய அரசு நடத்தும் நீட் போன்ற எந்தத் தேர்வாக இருந்தாலும் அதை எதிர்கொள்வதற்காக தமிழகத்தில் 412 மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் 75 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். அந்தப் பயிற்சி பெறுவதற்காக மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு வழங்க வேண்டிய மடிக்கணினி மற்றும் பயிற்சிக்கான குறுந்தகடு ஆகியவை நடப்பாண்டிலேயே வழங்கப்படும்.
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கல்வித் துறைக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ. 26,932 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவர்களின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நடப்பாண்டில் பள்ளிகளில் ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகளும், அடுத்த ஆண்டு 3 ஆயிரம், அதற்கு அடுத்த ஆண்டு 10 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
இதன் மூலம் இந்தியாவிலேயே தமிழக மாணவர்கள் அதிக தகுதிவாய்ந்த மாணவர்களாக உருவாக்கப்படுவார்கள். மாணவர்களுக்கு சிறப்பாக கல்வியை போதித்து முன்மாதிரியாக திகழும் ஆசிரியர்கள் கனவு ஆசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பாராட்டு சான்றிதழ், ரூ. 10 ஆயிரம் வைப்புத் தொகை பரிசாக வழங்கப்படும் என்றார் அவர்.