வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கான நுழைவுச் சீட்டுகளை பார்வையாளர்கள் இணைய வழி மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களின் வசதிக்காக இணையவழி மூலமாக நுழைவுச் சீட்டுகள் மற்றும் பூங்காவின் இதர வசதிகளான மின்கல ஊர்தி, சிங்க மான் உலாவிட ஊர்தி போன்ற வசதிகள் புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளன.
இணைய வழி மூலமாக நுழைவுச் சீட்டுகள் மற்றும் இதர வசதிகள் முன்பதிவு செய்ய விரும்புவோர் ww.vandalurzoo.com மற்றும் www.aazp.in ஆகிய இணையதளங்கள் மூலமாக பதிவு செய்யலாம்.
பார்வையாளர்கள் தங்களது பெயர், பூங்காவுக்கு வருகை தரும் நாள் மற்றும் நபர்களின் எண்ணிக்கை போன்ற தகவல்களை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும். இந்த வசதி ஆக்ஸிஸ் வங்கி மூலமாக செய்யப்பட்டுள்ளது.
வெற்றிகரமாக பதிவு செய்த பார்வையாளர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக பதிவு குறித்த விவரம் தெரிவிக்கப்படும். பார்வையாளர்கள் நுழைவுச் சீட்டு பதிவு செய்த விவரம் குறித்த ரசீது மற்றும் ஆளறி சான்று ஆகியவைற்றை தங்கள் வருகையின்போது சமர்ப்பிக்க வேண்டும். இணைய வழி மூலமாக முன் பதிவு செய்த பார்வையாளர்கள் தனி வழி மூலமாக அனுமதிக்கப்படுவர். இந்த வசதியால் பார்வையாளர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்படும்.
பார்வையாளர்களுக்கு வங்கி கடன் அட்டை மற்றும் பற்று அட்டை மூலமாகவும் நுழைவுச் சீட்டு பெறும் வசதி டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. பொங்கல் விடுமுறை காலத்தில் பார்வையாளர்கள் அதிகளவில் உயிரியல் பூங்காவுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதால் இணையதளம் மூலம் நுழைவுச் சீட்டுகள் அளிக்கும் வசதி, பார்வையாளர்கள் வசதிக்காக முன்கூட்டியே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.