திருவாரூர்: திருவாரூரில் அரசுப் பேருந்தில் தற்காலிக நடத்துனராக நடித்து பண வசூல் செய்த வாலிபர்கள் இருவர், பரிசோதகரைக் கண்டவுடன் தப்பி ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த் போராட்டமானது இன்று 8-வது நாளாக நீடிக்கிறது
இந்த வேலைநிறுத்த போராட்டத்தால், தமிழகம் முழுவதும் அரசு பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. எனவே இதற்கு மாற்றாக தனியார் பஸ்களை அரசு இயக்கி வருகிறது .மேலும் பணிமனையில் உள்ள அரசு பேருந்துகள் தற்காலிக டிரைவர்கள் மற்றும் நடத்துனர்களை கொண்டு இயக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், திருவாரூர் ஆகிய 4 பணிமனைகளில் உள்ள 239 பஸ்களில் பெரும்பாலானவை தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் மூலம் இயக்கப்பட்டன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரும்பாலான மக்கள் வெளியூர் செல்வதற்காக திருவாரூர் பஸ்நிலையத்தில் குவிந்தனர். இதன் காரணமாக அனைத்து அரசு பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இந்த நிலையில் திருவாரூரில் இருந்து நாகை செல்லும் அரசுப்பேருந்தில் தற்காலிக நடத்துனராக நடித்து 2 பேர் பயணிகளிடம் பணம் வசூல் செய்துள்ளனர். ஆண்டிப்பாளையம் பகுதியில் சாலையில் இருந்த டிக்கெட் பரிசோதகரை கண்டவுடன் போலி நடத்துனர்களில் ஒருவர் பணத்துடன் ஓட்டம் பிடித்துள்ளார். மற்றொரு நடத்துனரை பிடித்து டிக்கெட் பரிசோதகர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.