சென்னை: எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் சட்ட மசோதா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும், முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கும் இடையே கடும் விவாதம் ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் இன்று எம்எல்ஏக்கள் ஊதிய உயர்வு தொடர்பாக மு.க. ஸ்டாலின் பேசினார்.
அதாவது, எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு தற்போது தேவையா? எனக் கேட்டு அவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். திமுக எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவையில்லை. அதனை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குகிறோம். ஊதிய உயர்வு எங்களுக்குத் தேவையில்லை என்று கையெழுத்திட்டுள்ளோம் என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அனைத்து எம்எல்ஏக்களும் வசதியாக இல்லை. ஏற்காடு அதிமுக எம்எல்ஏ சித்ரா தொகுப்பு வீட்டில்தான் தற்பொழுதும் வசித்து வருகிறார். கடந்த 6 மாதமாக ஊதிய உயர்வு தொடர்பாக பேசாத ஸ்டாலின் இப்போது பேசுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது எழுந்து பேசிய முதல்வர் பழனிசாமி, நமது எம்எல்ஏக்களை நாமே காப்பாற்றவில்லை எனில் யார் காப்பாற்றுவார்கள்? என்று கேட்டார்.
அதன் பிறகு சட்டப்பேரவையில், எம்எல்ஏக்கள் ஊதிய உயர்வு தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது.