சென்னை: விரைவில் தமிழகக் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை ராகுல் அறிவிப்பார் என்று கூறியிருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்காக அனுதாபப்படுகிறேன் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டில் இன்று அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரர், சிதம்பரத்தின் வீட்டில் நடந்த சோதனை உள்நோக்கத்துடன் கூடியது. தவிர்க்கப்பட வேண்டியது என்றார்.
மேலும் அவர் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தான் என்னை சில தினங்களுக்குமுன்பு தலைவராக அறிவித்தார். கட்சியின் மாநிலத் தலைவராக தொடர்ந்து என் பணிகளை செய்வேன். ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்துக்கு எந்த பதிலும் சொல்லப் போவதில்லை.
இளங்கோவனுக்காக வருத்தப்படுகிறேன். அவர் அதிருப்தியில் பேசுகிறார். மனக்கவலையில் இருக்கிறார். அவருக்காக அனுதாபப்படுகிறேன் என்றார் திருநாவுக்கரசர்.