உடன்குடி அனல்மின் நிலையப் பணிகள் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் முடிவடையும் என மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
ஊரக மின்மயமாக்கல் கழகத்துக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்துக்கும் இடையே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடியில் அலகு 1, 2 ஆகியவற்றின் மூலம் தலா 660 மெகாவாட் வீதம் 1,320 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய, நிலக்கரி மூலம் இயங்கும் அதி நவீன அனல் மின் நிலையம் நிறுவுவதற்கு ரூ.10,453 கோடி கடனுதவி அளிக்கும் ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை மாலை கையெழுத்தானது.
மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி, ஊரக மின்மயமாக்கல் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி.வி. ரமேஷ்குமார், எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் விக்ரம் கபூர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான எம். சாய்குமார், மின் தொடரமைப்புக் கழக மேலாண்மை இயக்குநர் எஸ். சண்முகம் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பி.தங்கமணி கூறியது: உடன்குடி அனல் மின்நிலையம் 3 ஆண்டுகளில் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும். உடன்குடி அனல் நிலையத்தில் 660 மெகாவாட் வீதம், 1,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், இரு அதிநவீன அனல்மின் உலைகள் அமைக்க மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பெல் நிறுவனத்துக்கு பணியாணை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றிய பிறகு, தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும் என்றார் அவர்.