சென்னை: எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று தமிழக முதல்வர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ. பன்னீர்செல்வம் மற்றும் 11 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா சக்கரபாணி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வைத்தியநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த விளக்கத்தை அளித்தார்.
எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து சபாநாயகர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் அரசு வழக்குரைஞர் கூறியுள்ளார்.
அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்ட தினகரன் அணியிருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கபில் சிபல் வாதத்தை முன் வைத்தார்.
இந்த நிலையில், வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்பில் கால அவகாசம் கோரியதால், விசாரணை பிப்ரவரி 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஒரு வாரத்தில் மனுதாரர் தரப்பிலும் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.