சென்னை: பிரதமர் நேரம் ஒதுக்கியதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சென்னையில் வெகு பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜிஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். பிரதமர் நேரம் கொடுத்த பிறகு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும்.
ஹஜ் பயணிகளுக்கு மத்திய அரசு வழங்கி வந்த மானியத்தை ரத்து செய்து எடுத்திருக்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.
தமிழக மருத்துவ மாணவர் மரணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஏற்கனவே தமிழகத்தில் இருந்து வெளிமாநிலத்துக்குச் சென்று படிக்கும் தமிழக மாணவர்கள், மாநில அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வெளி மாநிலத்தில் கல்வி பயில செல்லும் மாணவர்கள் மாநில அரசில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாததால் தான் குழப்பங்கள் ஏற்படுகின்றன. வெளிமாநிலத்தில் படிக்கும் அனைத்து தமிழக மாணவர்களுக்கும் பாதுகாப்பு கொடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார்.
மேலும் அவர் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. தினகரன் கட்சி தொடங்கினால் அதனால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது. ஊடகங்கள்தான் அவரை பெரிதுபடுத்துகிறீர்கள். மக்கள் யாரும் அவரை நினைக்கவில்லை என்று கூறினார்.
முதல்வர் பழனிசாமியுடன் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், கூடிய சீக்கிரம் அதிமுக நாளிதழ் தொடங்கப்படும் என்று கூறினார்.
உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை குழு குறித்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் தீர்ப்பு வழங்கப்படும். இந்த நிலையில்தான் கர்நாடக அரசிடம் நீர் திறந்து விடக் கோரி கடிதம் எழுதினேன். ஆனால் அதற்கு பதில் என்ன கிடைத்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்று முதல்வர் கூறினார்.