ஹஜ் புனித பயணத்துக்கான மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஜனவரி 18-இல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
மானியம் ரத்து செய்யப்பட்டதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய தேசிய லீக் தேசிய பொதுச் செயலாளர் நிஜாமுதீன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சு.திருநாவுக்கரசர்: இஸ்லாமிய மக்கள் புனித பயணமாக மேற்கொள்ளும் ஹஜ் பயணத்துக்கான மானியத்தை மத்திய பாஜக அரசு ரத்து செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. சிறுபான்மை மக்களுக்கு தொல்லையும் சிரமமும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவர்கள் மீது இந்தத் தாக்குதலை பாஜக அரசு தொடுத்துள்ளது. இதனைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை அணியின் சார்பில் ஜனவரி 18-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மானியத்தை மீண்டும் வழங்க உத்தரவிட வேண்டும்.
ஜி.கே.வாசன்: ஹஜ் பயண மானியத்தை ரத்து செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. மானியத்தை ரத்து செய்துவிட்டு, அதை சிறுபான்மையின பெண் குழந்தைகளின் கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்வோம் என்பது ஏற்புடையது அல்ல. அப்படிச் செய்வதாக இருந்தால் கல்வி மேம்பாட்டுக்கு என்று தனி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
நிஜாமுதீன்: ஆண்டுதோறும் மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்கு மானியம் வழங்குவதாக மத்திய அரசு ஒரு நாடகத்தை நடத்தி வருகிறது. இனி வரும் ஆண்டுகளில் உலக அளவில் ஒப்பந்தப் புள்ளி கோரி அதில் குறைவான கட்டணம் குறிப்பிடும் வானூர்தி நிறுவனம் மூலமாகவே ஹாஜிகள் பயணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது ஹஜ் பயணித்துக்குத் தேர்வு செய்யப்படும் யாத்ரீகர்கள் அவர்களே விமானச் சீட்டை பணம் கட்டிப் பெற்றுக்கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். அதன் பிறகு மானியத்தை ரத்து செய்ய வேண்டும்.