அரசியல் களத்தில் கமலுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து காலம்தான் பதில் சொல்லும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தின் தொடர்ச்சியாக 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' என்ற படத்தை எம்.ஜி.ஆர். உருவாக்கவிருந்தார். எம்.ஜி.ஆரின் அரசியல் பயணத்தைத் தொடர்ந்து அந்தப் படத்தை தயாரிக்க முடியாமல் போனது. தற்போது அதே பெயரில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் திரைப்படம் எடுக்கவுள்ளார்.
இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகை லதா, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படத்தின் தொடக்க காட்சியை நடிகர் ரஜினிகாந்த் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
ரஜினியும்-கமலும்: மேடையில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அருகருகே அமர்ந்திருந்தனர். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் நடிகர் ரஜினிகாந்திடம் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் அளித்ததாவது:
எம்ஜிஆர் கொள்கையை அரசியல் கட்சிகள் பின்பற்றுகின்றனவா?
கண்டிப்பாக, ஓரளவு பின்பற்றுகிறார்கள்.
நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கியுள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கமல் அரசியல் அறிவிப்பை நீங்கள் முன்கூட்டியே எதிர்பார்த்தீர்களா?
இல்லை. நான் கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
நீங்களும் கமலும் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதா?
அதற்கு காலம் தான் பதில் சொல்லும், பார்க்கலாம்.
சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பேன் என்று கூறியுள்ளீர்கள். 6 மாதத்தில் தேர்தல் வந்தால் சந்திப்பீர்களா?
கண்டிப்பாக சந்திப்பேன்.