யோகாசனத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் வாழ்வில் உச்சத்தை அடையலாம் என்று சின்மயா யுவகேந்திரா அமைப்பின் அகில உலகத் தலைவர் சுவாமி மித்ரானந்தா தெரிவித்தார்.
ஹிந்து ஆன்மிக, சேவை மையம் மற்றும் பண்பு, கலாசார அமைப்பு சார்பில் சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் 9-ஆவது ஹிந்து ஆன்மிக, சேவைக் கண்காட்சி ஜனவரி 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா அக்கல்லூரியில் ஜனவரி 23-ஆம் தேதி நடைபெறுகிறது.
10 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்ட யோகாசன நிகழ்ச்சி: இந்த கண்காட்சி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட 10,800 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற யோகாசன நிகழ்ச்சி புதன்கிழமை (ஜன. 17) நடைபெற்றது.
இதை சின்மயா யுவகேந்திரா அமைப்பின் அகில உலகத் தலைவர் சுவாமி மித்ரானந்தா தொடக்கி வைத்துப் பேசியதாவது:
ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் வெற்றி பெற முதலில் தங்களை யார் என்று உணர்ந்து கொள்வதுடன், தாய், தந்தையை என்றுமே நினைவில் கொள்ள வேண்டும்.
யோகாசனம் என்பது மனித குலத்துக்குக் கிடைத்த அருமருந்தாகும். அது உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வை அளிக்கிறது. யோகாசனத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் வாழ்வில் உச்சத்தை அடையலாம் என்றார்.
தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் யோகாசன துறைத் தலைவர் ஆர். இளங்கோவன் இந்த நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
ஹிந்து ஆன்மிக, சேவை அறக்கட்டளையின் அறங்காவலர் ராஜலட்சுமி, விவேகானந்தா கல்விக் குழுமத்தைச் சேர்ந்த எல். ராமமூர்த்தி, டி.ஏ.வி.கல்விக் குழுமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், காக்னிசென்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் லட்சுமி நாராயணன், பதஞ்சலி யோகா சமிதியின் மாநிலத் தலைவர் பாரஸ்மல், விவேகானந்தா கல்விக் குழுமத்தின் உடற்கல்வி இயக்குநர் ஜெகதலப்பிரதாபன், மகிளா பதஞ்சலி யோக் சமிதியின் மாநிலத் தலைவர் ராஜேஸ்வரி பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.