மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் தேசிய இளைஞர் தின விழாவில், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகளை வழங்குகிறார்.
சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் தேசிய இளைஞர் தின விழாவாகக் கொண்டாடப்படுகிறது. செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெறும் விழாவுக்கு மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் தலைமை வகிக்கிறார்.
விழாவில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பங்கேற்று கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள், கேடயங்களை வழங்கிப் பேசுகிறார். தலைமை நீதித்துறை நடுவர் இல.சொ.சத்தியமூர்த்தி வாழ்த்துரை வழங்குகிறார்.
சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமம் சுவாமி சத்தியபிரபானந்தா, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா சுவாமி ஹரிவ்ரத்தானந்தா ஆகியோர் அருளுரை வழங்குகின்றனர்.
பங்கேற்ற மாணவர்கள்: ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் 205 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. அதன்படி 15, 552 மாணவ, மாணவியர்கள் கட்டுரைகள் எழுதியிருந்தனர். கட்டுரை எழுதியவர்களில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்படுகிறது.
தேசிய இளைஞர் தினத்துக்காக நடைபெற்ற கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்ற கல்வி நிறுவனங்களுக்கு நினைவுப் பரிசுகளும், சுவாமி விவேகானந்தரின் உருவப் படங்களும் வழங்கப்படுகின்றன.