மதுரை: சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் மனிதனின் மனநிலையை மாசுபடுத்துகின்றன என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கிருபாகரன் கருத்துக் கூறியுள்ளார்.
60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2 இளைஞர்கள் தரப்பில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் இந்த கருத்தைக் கூறினார்.
2016ம் ஆண்டு மனநலம் குன்றிய மூதாட்டியை இரண்டு இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி இரண்டு இளைஞர்களும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அண்மைக் காலமாக அனைத்து இடங்களிலும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. பாலியல் வன்முறையைத் தடுக்க போதிய நடவடிக்கை இல்லை. சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவை மனித மனங்களை மாசுபடுத்துகின்றன என்று கருத்துக் கூறினார்.
மேலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.