பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து: தருமபுரி, திருச்சி, கோவையில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து தருமபுரி, திருச்சி, கோவையில் கல்லூரி மாணவ, மாணவியர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
தருமபுரி பேருந்து நிலையத்தில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள்.
தருமபுரி பேருந்து நிலையத்தில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள்.

பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து தருமபுரி, திருச்சி, கோவையில் கல்லூரி மாணவ, மாணவியர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
தமிழக அரசு அண்மையில் அறிவித்த பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தருமபுரியில் புதிதாகத் தொடங்கப்பட்ட சட்டக் கல்லூரியில் பயிலும் 160 மாணவர்களில், பெரும்பாலானோர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வகுப்புகளை முடித்துவிட்டு, பேருந்து நிலையத்துக்கு வந்தனர். புறநகர்ப் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வெளியே வரும் வாயிலில் நின்று முழக்கங்களை எழுப்பத் தொடங்கினர்.
சுமார் 10 நிமிடங்கள் போக்குவரத்துக் கட்டண உயர்வுக்கு எதிராக முழக்கமிட்ட அவர்கள், அரசு கட்டண உயர்வைத் திரும்பப் பெறாவிட்டால் தினமும் வகுப்புகளை முடித்து ஊருக்குச் செல்லும் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர்.
திருச்சியில்.....
பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக திருச்சியில் 2ஆவது நாளாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக சத்திரம் பேருந்துநிலையம் அருகே தனியார் கல்லூரி மாணவர், மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கூடி பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாணவர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 10 மாணவிகள் உள்பட 60 பேரை போலீஸார் கைது செய்தனர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை செவ்வாயக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதேபோல, துவாக்குடியில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் அண்ணா வளைவு அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
கோவையில் ....
பேருந்துக் கட்டண உயர்வை வாபஸ் வாங்க வலியுறுத்தி கோவை-மருதமலை சாலையில் உள்ள அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 80-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி நுழைவாயில் முன் அமர்ந்து போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். இதையடுத்து, வடவள்ளி பேருந்து நிலையம் அருகே சென்ற மாணவர்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தால் கோவை-மருதமலை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரையில்....
மதுரை சட்டக்கல்லூரியில் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் கல்லூரி வாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். 
திண்டுக்கல் மாவட்டம் நொச்சியோடைப்பட்டி அடுத்துள்ள ஆர்எம்டிசி காலனி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், திண்டுக்கல்-நத்தம் சாலையில் செவ்வாய்க்கிழமை திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 25 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பழனி அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரியில் இரண்டாம் நாளாக செவ்வாய்க்கிழமையும் கல்லூரிக்கு வெளியே மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். ஆனால் போலீஸார் தடை விதித்ததால், கல்லூரி வளாகத்தில் அமர்ந்து மாணவ, மாணவியர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com