கூடலூரை அடுத்துள்ள பாலம்வயல் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்ததால் வாழைத் தோட்டங்கள் திங்கள்கிழமை பெருத்த சேதமடைந்தன.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட பாலம்வயல் பகுதி அரிக்கோடு வயல் பகுதியில் உவைத், ரவி, ரியாஸ், சதீஷ் ஆகியோர் தங்கள் நிலங்களில் நேந்திரன் வாழை பயிரிட்டிருந்தனர். அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் அப்பகுதியில் திங்கள்கிழமை சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது. இதனால், வாழை மரங்கள் முறிந்து விழுந்து பெருத்த சேதமடைந்தன. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.