கோவை: ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நீட் தேர்வு நடத்துமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று தமிழக அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.
தில்லியில் சனிக்கிழமைஎன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், 'இனி நீட் தேர்வானது ஆண்டுக்கு பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் கணினி முறையில் நடத்தப்படும்' எனக் கூறினார்.
மேலும் அத்துடன் இப்படி நடத்தப்படும் தேர்வுகள் வெளிப்படையானதும் பாதுகாப்பானதாகவும் இருக்கும். கணினி முறையில் தேர்வு நடந்தாலும் இது ஆன் லைன் தேர்வு இல்லை. தேர்வுகளுக்கான தேதிகள் விரைவில் இறுதி செய்யப்பட்டு விடும். மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் இணையதளம் மூலம் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நீட் தேர்வு நடத்துமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று தமிழக அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.
நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக கோவை சென்றுள்ள அவர், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, 'ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு நடத்துவது பற்றி தமிழக அரசுக்கு கடிதம் வரவில்லை. ஆண்டுக்கு ஒரு முறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்' என்று தெரிவித்தார்.