யானை வழித்தடங்களில் முள்புதர்கள்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஆனைமலை வனப்பகுதியில் யானைகள் செல்ல முடியாத வகையில் அமைந்துள்ள முள்புதர்களை அகற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வனத் துறை அறிக்கை தாக்கல் செய்ய

ஆனைமலை வனப்பகுதியில் யானைகள் செல்ல முடியாத வகையில் அமைந்துள்ள முள்புதர்களை அகற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வனத் துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கோகுலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஆனைமலை வனப் பகுதியில் யானைகள் செல்லும் வழித்தடங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள 49 மலைவாழ் பழங்குடியின கிராமங்களில் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் பரப்பிலான நிலங்களில் விவசாயம் செய்யப்படுகிறது. 
இந்தப் பகுதியில் நாட்டுக் கருவேலம், ஓடை மற்றும் குடை வேலம், சீமைக் கருவேலம் உள்ளிட்ட மரங்களை வனத் துறையினர் வளர்ப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
யானைகளின் வழித்தடங்களில் இந்த முள்புதர்கள் அமைந்துள்ளதால், யானைகள் தங்களது வழித்தடத்தைப் பயன்படுத்த முடியவில்லை. 
இதனால் வழி தவறி கிராமங்களுக்குள் யானைகள் நுழைந்து விடுகின்றன. இதனைத் தடுக்க முட்செடிகளை அகற்றக் கோரி தலைமை வனப்பாதுகாப்பு அலுவலரிடம் மனு அளித்தேன். அந்த மனுவின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மனுவைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக வனத் துறை 4 வார காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com