காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், இயக்குநர் பா.ரஞ்சித்தும் செவ்வாய்கிழமை தில்லியில் வைத்து சந்தித்துள்ளனர். நடிகர் கலையரசனும் இந்த சந்திப்பின் போது உடனிருந்தார். இந்த சந்திப்பு குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பகுதியில் கூறியிருப்பதாவது,
"மெட்ராஸ், கபாலி மற்றும் காலா போன்ற வெற்றிப்படங்களின் பின்னணியில் இருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசனை தில்லியில் வைத்து நேற்று சந்தித்தேன். நாங்கள் அரசியல், திரைப்படம் மற்றும் சமூகம் குறித்து உரையாடினோம். இந்த உரையாடல் எனக்கு மகிழ்ச்சியளித்தது. இந்த உரையாடல் மேலும் தொடர்வதை எதிர்நோக்கி இருக்கிறேன்" என்றார்.
இந்த சந்திப்பானது அரசியல் பார்வையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. வரும் தேர்தல்களில் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் எதிர்கட்சிகளுடன் கைகோருவது, பாஜகவுக்கு எதிராக அணி திரட்டுவது உள்ளிட்ட வியூகங்களை வகுத்து வருகிறது. அப்படி இருக்கையில் இவர்கள் அரசியல் குறித்தும் பேசியிருக்கிறார்கள் என்றால் கவனிக்கத்தக்க வேண்டிய சந்திப்பாக இது அமைகிறது.
இதற்குமுன், குஜராத் சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியும் ரஞ்சித்தும் சந்தித்துள்ளனர். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி, பாஜகவை எதிர்ப்பதற்காக தொடர்ந்து வெற்றி பெற்று வந்த வட்கம் தொகுதியை ஜிக்னேஷ் மேவானிக்காக விட்டுக்கொடுத்து அவருக்கு ஆதரவாக வாக்கும் சேகரித்தது நினைவுகூரத்தக்கது.