பல்வேறு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் பாரதிராஜாவால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியவில்லையா? என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை வடபழனி காவல் நிலையத்தில் நாராயணன் என்பவர் அளித்த புகாரில், கடந்த ஜனவரி 18-ஆம் தேதி நடந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பாரதிராஜா, விநாயகர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததோடு, கவிஞர் வைரமுத்துக்கு தலைக்குனிவு ஏற்பட்டால் தலை எடுக்கவும் தயங்க மாட்டோம் எனப் பேசினார்.
எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்தப் புகாரின் பேரில் பாரதிராஜா மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாரதிராஜா மனு தாக்கல் செய்தார். பாரதிராஜாவின் மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜமாணிக்கம், அவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி மே23ஆம் தேதி உத்தரவிட்டார். ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் நீதிமன்றத்திற்கு செல்ல முடியவில்லை என்றும் எனவே, முன் ஜாமீன் உத்தரவை பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என புதிய மனு ஒன்றை பாரதிராஜா தாக்கல் செய்தார்.
இம்மனுவை இன்று விசாரித்த நீதிபதி பி. ராஜமாணிக்கம், பல்வேறு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் பாரதிராஜாவால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியவில்லையா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் கால நீட்டிப்பு கோரி கூடுதல் மனுவாக தாக்கல் செய்யாமல் புதிய மனு தாக்கல் செய்தது தவறு எனக் கூறிய நீதிபதி புகார்தாரர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.