முணுமுணுப்புகள் காதில் கேட்டதா? எம்எல்ஏக்கள் ஊதிய உயர்வை ஏற்க திமுக முடிவு??
சென்னை: தமிழக எம்எல்ஏக்களுக்கான ஊதியம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 ஆயிரமாக உயர்த்தப்பட்ட போது, ஊதிய உயர்வை நிராகரித்த திமுக, தனது முடிவை மாற்றிக் கொள்ளப் போகிறதாம்.
தமிழக சட்டப்பேரவையில் இருக்கும் சக எம்எல்ஏக்களைப் போல், திமுக எம்எல்ஏக்களும் விரைவில் ஊதிய உயர்வுடன் கூடிய ஊதியத்தைப் பெற உள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஊதியத்தை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழக அரசு கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தது. அப்போது அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் சம்பளப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருந்த நிலையில், தொழிலாளர்கள் தரப்பில் 2.57 சதவீத ஊதிய உயர்வு கோரியிருந்த நிலையில், தமிழக அரசு 2.44 சதவீத ஊதிய உயர்வை அளித்தது.
இதனால் ஏற்பட்ட பிரச்னை நீதிமன்ற தலையீட்டால் தற்காலிகமாக தீர்த்துவைக்கப்பட்டது.
போக்குவரத்து ஊழியர்களின் பிரச்னை தீரும் வரை, எம்எல்ஏக்களுக்கான ஊதிய உயர்வை ஏற்க மாட்டோம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். எனவே, திமுக எம்எல்ஏக்களுக்கு பழைய ஊதியமே வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், எம்எல்ஏக்களுக்கு ஆகும் செலவும், திமுக தலைமையின் முடிவு குறித்து சில எம்எல்ஏக்கள் வருத்தப்பட்டதாகவும், ஊதியம் குறைவாகவும், செலவு அதிகமாகவும் இருக்கும் நிலையில் ஊதிய உயர்வை வேண்டாம் என்று கூறியது குறித்து முணுமுணுத்து வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதுபோன்ற சில காரணங்களால், திமுக தனது முடிவை மாற்றிக் கொள்ள இருப்பதாகவும், ஊதிய உயர்வை நிராகரித்த முடிவை மாற்றிக் கொள்வது குறித்து கடிதம் அளிக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.