சென்னை: காவலர்களுக்கு கட்டாய வார விடுப்பு விஷயத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து வரும் 19ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.
காவல்துறையினருக்கு கட்டாய வார விடுப்பு வழங்குவது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறையினருக்கு வார விடுப்பு அவசியம் என்று நீதிபதி கிருபாகரன் வலியுறுத்தினார்.
மேலும் அவர் கூறியதாவது, வார விடுப்பு என்பது ஆவணங்கள் அளவிலேயே உள்ளது. வாரவிடுப்பு நாட்களிலும் காவலர்கள் பணிக்கு அழைக்கப்படுகின்றன. வாரவிடுப்பு என்பது காவலர்களுக்கு மிகவும் அவசியம். விடுமுறை நாட்களை காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் செலவிட வேண்டும். காவலர்களுக்கு கட்டாய வார விடுப்பு வழங்குவது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக ஜூலை 19ம் தேதிக்குள் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.