நடத்துநரில்லா பேருந்துகளை இயக்கும் முடிவுக்கு எதிரான வழக்கில் போக்குவரத்து செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அனைத்தும் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து, நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இந்த நஷ்டத்தில் இருந்து போக்குவரத்துக் கழகங்களை மீட்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக நடத்துநரில்லா பேருந்தை இயக்க திட்டமிட்டு கடந்த 5-ஆம் தேதி கோவை, சேலம், மதுரை ஆகிய பகுதிகளில் இந்த சேவை தொடங்கப்பட்டது.
இந்நிலையில் நடத்துநரில்லா பேருந்துகளை இயக்கும் அரசின் முடிவுக்கு எதிராக போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் ஆறுமுகநயினார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக போக்குவரத்து செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை ஜூலை 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.