நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாதா? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையில் நடந்த திரைப்பட விழாவில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, அவதூறாக பேசியதாக இந்து மக்கள் முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி இயக்குநர் பாரதிராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பாரதிராஜா வடபழனி காவல் நிலையத்தில் 3 வார காலத்துக்கு ஆஜராகி கையெழுத்திடவும், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற நிபந்தனைகளை நிறைவேற்ற முடியவில்லை எனக்கூறி பாரதிராஜா சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதிராஜா முன்ஜாமீன் கோரிய வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளை நிறைவேற்றாதது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த மனு குறித்து புகார்தாரர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.