நீட் தேர்வு வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். அதற்காக மத்திய அரசுக்கும், சிபிஎஸ்இ-க்கும் உரிய அழுத்தம் தரவேண்டும் என மார்க்சிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தினார். இதுகுறித்து சென்னையில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து சி.பி.எஸ்.இ. மேல்முறையீடு செய்வார்கள் என்பதால்தான் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளோம். நீட் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வரவேற்றுள்ளார். எனவே, தமிழக அரசும், முதல்வரும் இந்தத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கும், சிபிஎஸ்இ-க்கும் அதற்கான அழுத்தத்தை தர வேண்டும்.
ஏற்கெனவே கலந்தாய்வு முடிந்து மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு இடையூறு இல்லாமல், புதிதாக சேர்க்கைக்கான இடங்களை அதிகப்படுத்த வேண்டும். இத்தகைய அசாதாரணமான சூழல் உருவாக்கியவர்கள் அதனை சரி செய்வதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்த முடியும். பி.சி, எஸ்சி பிரிவு மாணவர்களுக்குத் தனியார் கல்லூரிகளில் இடம் ஒதுக்கும்பட்சத்தில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே மாணவர்களால் செலுத்த முடியும். மீதமுள்ள தொகையை சிபிஎஸ்இ செலுத்த வேண்டும். சுமுகமாக இதை அமல்படுத்தினால் 24 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும். நீதிமன்றம் 15 நாட்கள்கால அவகாசம் கொடுத்திருந்தாலும், அதுவரை காத்திராமல் உடனடியாக தேவை யானநடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண் டும் என்றார் அவர்.