மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்தது

கர்நாடக அணைகளில் இருந்து அதிக நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை 70 அடியாக உயர்ந்தது. 
அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால், வலைகள் மற்றும் பரிசல்களுடன் மேடான பகுதி நோக்கிச் செல்லும் மீனவர்கள்.
அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால், வலைகள் மற்றும் பரிசல்களுடன் மேடான பகுதி நோக்கிச் செல்லும் மீனவர்கள்.

கர்நாடக அணைகளில் இருந்து அதிக நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை 70 அடியாக உயர்ந்தது. 
கர்நாடக மாநிலம் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. உபரி நீர் கடந்த இரு நாள்களாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை அணைக்கு நொடிக்கு 14,334 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, புதன்கிழமை காலை 32,284 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால், செவ்வாய்க்கிழமை காலை 65.15 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 68.42 அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3.27 அடி உயர்ந்தது. புதன்கிழமை மாலையில் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது. அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 31.36 டி.எம்.சியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு இதே நிலையில் இருந்தால், ஒரு வார காலத்தில் அணையின் நீர்மட்டம் 90 அடியாக உயரும். அப்போது சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் வாய்ப்பு ஏற்படும். 
கர்நாடக அணைகளிலிருந்து நொடிக்கு 50,000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர்வரத்தால் இந்த மாத இறுதிக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும். புதன்கிழமை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியதால், பண்ணவாடி பரிசல் துறையில் நீருக்கு வெளியே தெரிந்த ஜலகண்டேசுவரர் ஆலயத்தின் நந்தி சிலை நீரில் மூழ்கியது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்ததால், காவிரிக் கரையில் முகாமிட்டிருந்த மீனவர்களின் முகாமை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மீனவர்கள் தங்களின் வலைகள் மற்றும் உடைமைகளை பரிசலில் ஏற்றிக் கொண்டு மேடான பகுதியை நோக்கிச் சென்றனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பண்ணவாடி, கோட்டையூர் பகுதிகளில் நீரோடைபோல காணப்பட்ட காவிரி தற்போது பரந்து விரிந்து கடல் போல காட்சி தருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com