வேளாண் கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின: 19-ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்காக நடைபெற்ற ஆன்லைன் கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்காக நடைபெற்ற ஆன்லைன் கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு, 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள வேளாண்மை, தோட்டக் கலை, வனவியல், உணவு - ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப் படிப்புகளில் உள்ள 3,422 இடங்களுக்கு 2018-19ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகின்றன.
சிறப்புப் பிரிவினர் உள்ளிட்ட பிற ஒதுக்கீடுகளுக்கான இடங்கள் தவிர 2,593 இடங்களை ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்றது.
கலந்தாய்வுக்கு உரிய கட்டணம் செலுத்தி 8,986 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 5,337 பேர் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் தங்களுக்கான முதல் மூன்று விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்துள்ளனர். முதல் 2,593 பேரைத் தவிர மற்ற மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யார், யார் எந்தெந்தப் பாடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், யாரெல்லாம் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர் என்ற விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. மாணவர்கள் தங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான கடிதத்தை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி மாணவர்கள் கடிதங்களை பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.
சேர்க்கைக் கட்டணமாக ரூ. 20 ஆயிரம் செலுத்த வேண்டும். அதன் பிறகு ஜூலை 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று தங்களிடம் உள்ள அனைத்து சான்றிதழ்களையும் காண்பிக்க வேண்டும்.
கட்டணம் செலுத்தாத, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் அந்த இடத்தைப் பூர்த்தி செய்து கொள்வார்கள். இவ்வாறு தரவரிசைப் பட்டியலில் யாரெல்லாம் முன்னேறிச் செல்ல இருக்கின்றனர் என்ற விவரம் வரும் 21ஆம் தேதி தெரிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக முதன்மையர் (வேளாண்மை) மகிமை ராஜா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com