பி.இ. கலந்தாய்வை நீட்டிக்கக் கோரும் மனு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு நீட்டிக்கக் கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை (ஜூலை 18) விசாரிக்கப்பட உள்ளது. 

பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு நீட்டிக்கக் கோரும் மனு உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை (ஜூலை 18) விசாரிக்கப்பட உள்ளது. 
தமிழகத்தின் 509 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. பி.இ. கலந்தாய்வை ஜூன் இறுதி வாரம் அல்லது ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி, ஜூலை 30-ஆம் தேதிக்குள் முடிப்பதை பல்கலைக்கழகம் வழக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில், 2018-19-ஆம் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு சற்று தாமதமாகத் தொடங்கப்பட்டது. அதாவது ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி நிறைவடைந்தது. இதன் காரணமாக, பி.இ. கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில் தொடங்க இயலாமல் போனது. 
இது ஒருபுறமிருக்க, நீட்' தேர்வில் ஆங்கில வினாத்தாளை தமிழில் மொழிபெயர்த்ததில் ஏற்பட்ட பிழைகளுக்கு பொறுப்பேற்று சிபிஎஸ்இ நிர்வாகம் தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது. 
இதுபோன்ற காரணங்களால், பி.இ. கலந்தாய்வை நடத்தி முடிக்க ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்திருந்தது. 
அதன்படி, இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்குரைஞரிடம், ஏன் கலந்தாய்வுக்கு கூடுதல் அவகாசம் கேட்கிறீர்கள்' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, நீட் தேர்வு வழக்கு விவகாரத்தில் கருணை மதிப்பெண்கள் வழங்கவும், புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு மருத்துவக் கலந்தாய்வு நடத்தவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவு குறித்து வழக்குரைஞர் எடுத்துரைத்தார். மேலும், மருத்துவக் கலந்தாய்வில் இடம் கிடைக்காத மாணவர்கள் பி.இ. கலந்தாய்வில் பங்கேற்கவும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
இதையடுத்து, நீட் தேர்வு கருணை மதிப்பெண் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அளித்த தீர்ப்பின் நகலை மனுவுடன் இணைத்து தாக்கல் செய்யுமாறு கூறிய நீதிபதிகள், அம்மனுவை புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com