இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணையை தில்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமைக்கு (ஜூலை 19) ஒத்திவைத்தது.
இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, சங்கீதா தீங்க்ரா ஷெகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன் வைக்க 45 நிமிடங்கள் தேவை என்றார். அப்போது நீதிபதிகள் விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கிறோம் எனத் தெரிவித்தனர்.
முன்னதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன் கடந்த ஜூலை 12-ஆம் தேதி முன்வைத்த வாதத்தில் ஆட்சியிலும், கட்சியிலும் எங்கள் தரப்புக்கு பெரும்பான்மை உள்ளது. இந்த பெரும்பான்மையின் முக்கியத்துவம் சாதிக் அலி வழக்கிலும், நரசிம்ம ராவுக்கும், என்டி திவாரிக்கும் இடையே ஏற்பட்ட பிளவின் போதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சின்னங்கள் தொடர்பான வழக்குகளில் தேர்தல் ஆணையம் பெரும்பான்மையைக் கருத்தில் கொண்டு முடிவு எடுத்து வருகிறது. அந்த வகையில், இரட்டை இலைச் சின்னம் வழக்கில் பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டு எங்கள் தரப்புக்கு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது' என்றார். அப்போது வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 18-ஆம் தேதி ஒத்திவைத்திருந்தனர்.
பின்னணி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின்அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் 23-இல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக டி.டி.வி. தினகரன், வி.கே. சசிகலா ஆகியோர் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் தனித் தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தற்போது தில்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.